
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் செயற்;பாடுகள் இன்று அல்லது நாளை இடைநிறுத்தப்படக் கூடிய சமிஞ்சை தோன்றியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைக்குள் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு சேவைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட சேவைகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை சுகாதார அமைச்சு இதுவரை வழங்காமையினாலேயே இந்த நிலை தோன்றியுள்ளதாக சங்கத்தின் உப செயலாளர் உப்புல் குணசேகர தெரிவித்தார்.
இதுவரை வைத்தியசாலைக்கு உணவு விநியோகிப்பவர்களுக்காக வழங்க வேண்டிய 90 லட்சம் ரூபாவை செலுத்தாமையினால் உணவு விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக சங்கத்தின் உப செயலாளர் உப்புல் குணசேகர மேலும் தெரிவித்தார்.அத்துடன், வைத்தியசாலைக்கு தேவையான மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபைக்கு 230 லட்சம் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாகவும், வைத்தியசாலையை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்காக 56 லட்சம் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாகவும் மற்றும் அநுராதபுரம் நகரிலுள்ள எரிப்பொருள் நிலையத்திற்கு 40 லட்சம் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினைகளை தீர்க்காததினால் அநுராதபுர வைத்தியசாலையின் அன்றாட நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக அந்த சங்கத்தின் உப செயலாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment