
சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் கிழக்கு மாகாணத்திற்கு மிகவும் பயனுள்ள ஒரு வரவு செலவுத் திட்டம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் 4ஆவது வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்ட அமர்வு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் இவ்வாறு கூறினார்.
இது அனைவரும் எதிர்பார்த்ததை விடவும் மிகவும் சிறந்ததொரு வரவு செலவுத் திட்டம் என தெரிவித்த அவர், மீன்பிடி மற்றும் விவசாயம் போன்ற துறைகளுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மீன்பிடி மற்றும் விவசாயம் போன்றவற்றை மேற்கொள்வதற்கான வளங்கள் கிழக்கு மாகாணத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.
அந்தவகையில் இம்முறை ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் கிழக்கு மாகாண மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment