
தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்களுக்கான ஒழுங்கு விதிகள் எந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் அநீதி இழைக்கும் நோக்கில் அமுல்படுத்தப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்களுக்கான ஒழுங்கு விதிகளை அமுல்படுத்தும் தீர்மானம் திடீரென மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையல்ல என்றும், 2005ஆம் ஆண்டிலிருந்தே இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஒழுங்கு விதிகளை அமுல்படுத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஒழுங்கு விதிகள் அமுல்படுத்தப்படுவதன் மூலம் ஒரு சாராருக்கு மட்டும் அனுகூலங்களை வழங்கி இன்னொரு சாரார் பாதிக்கப்பட இடமளிக்க மாட்டோம் என்றும் இவ்வாறு ஒழுங்கு விதிகளை அமுல்படுத்துவதற்கு ஊடகத்துறை அமைச்சருக்கும் அதிகாரம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒழுங்கு விதிகள் தன்னிச்சையாக அமுல்படுத்தப்படவில்லை.
இந்தியா, ஹொங்கொங் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அமுல்படுத்தப்படும் தொலைக்காட்சி ஒழுங்கு விதிகளை நன்கு பரிசீலித்த பின்னரே இந்த ஒழுங்கு விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

No comments:
Post a Comment